அன்பே...
எத்தனை முறை
என் ~ கிறுக்கல்களைக்
கவிதை என்று படித்திருப்பாய்..?
படித்து முடித்தபின் ~ உன்
விமர்சனம் என்னைப்
வெக்கப்படக வைக்குமே ..!
இன்று...ஜனவரி இருபத்தேழு
நீ ~ என்னை பிரிந்த நாள்
உன்னுருவம் மறைந்த நாள்...!
இந்தக் கவிதையை
அழகாய் எழுதவே
ஆசைப்படுகிறேன்....
ஆனாலும் எழுத முடியவில்லை...
நம் காதலைவிடவும்
அழகான கவிதை
நீ இல்லாத போது
எனக்கெதற்கு..?
பேனாவும் பேப்பருமாய்
முற்றத்தில் அமர்ந்து ~ உனக்கான
கவிதையை எழுத ஆரம்பித்தேன்..
மரத்திலிருந்து பிடி விட்ட
இலை ஒன்று காற்றில்
பஞ்சுபோல் இலகுவாய் மிதந்து
ஆடி அசைந்து காகிதத்தில் விழுந்தது..!!
உலக மேடையில் வாழ்க்கை
நாடகம் முடித்து வேஷம் கலைத்து
வீடு திரும்பும் நாடக நடிகனின்
வேளை வந்ததை வியப்பில்
உணர்ந்தேன்....!
நித்திய வீடு திரும்பிய
உன்னை நினைத்தேன்
கண்கள் பனித்தன...!
அடுத்த கணம் நிச்சயமில்லை...
நேற்று இன்றி ..; இன்று இல்லை...
இன்று இன்றி ..; நாளை இல்லை...
நேற்றையக் கதையை
இன்று மறக்கிறோம்...
இன்றையக் கதையை
நாளை மறப்போம்..
முந்தினவர்கள் கதையை
முறைப் படுத்தாவிடில்
முகவரி இழந்து
முடங்கிப் போவோம்..
நிகழ்வுகள் இன்றி
வாழ்க்கை இல்லை...
அதில் ஒரு நிகழ்வே
உன் ~ வாழ்க்கையின்
முடிவாகிப் போனது..
கனவுகள் இன்றி
வாழ்க்கை இல்லை...
மீட்டுவோன் இன்றி
நாதம் இல்லை...
அதுபோல் நீயின்றி
உன்னை இழந்து ..!
நானும் நானாக இல்லை
என்னிடத்தில்
எதையும் நீ கேட்கவில்லை...
உனக்கென்று
எதுவும் நான் கொடுக்கவும் இல்லை...
ஆனால் காதலை மட்டும்
நம் இதயங்களில் இடம்
மாற்றிக் கொண்டோம்..!
மலர்ந்த பூ உதிர்ந்த போது
காலம் மாறியிருந்தது..!
காயான பூ
மறுபடி மலராவதில்லை..!
பிறப்பின்றி இறப்பில்லை...
பிறந்தவர் எவரும்
நிரந்தார் இல்லை...
இறந்தவர் எவரும்
எழுந்து வந்ததில்லை...!
இறுதிவரை இருப்பேன் என்றவன்
இமைப் பொழுதில் சென்று விட்டான்
நீர்வீழ்ச்சி அ ருகில்
இருவரும் அமர்ந்து
மணிக்கணக்கில் பேசிய ~ நம்
வாழ்க்கை கனவுகள்
எல்லாம் பயனில்லாமல்
தொடர் கதைகளாக
வந்து போகின்றன
இன்னும் என் கனவுகளில்..!
காதலை வளர்த்தது
சுலபமாயிருந்தது..
அதைப் பாதுகாத்ததும்
சுலபமாயிருந்தது....இன்று
நீ இன்றி ~ கன்னி நான்
விதவையானேன்..!
காற்றோ, மழையோ
கடுங்குளிரோ, வெயிலோ
பனியோ, புழுக்கமோ
பருவங்கள் எதுவானாலும்
உன் நினைவுகள் என்றும்
என் ஆழ் நெஞ்சில்..!
இந்த ஊரில்
இந்தத் தெருவில்
இந்த வீட்டில்
நேற்று நீ இருந்தாய்...
இன்று நீ இல்லை...ஆனால்
நீ படுத்த கட்டில்
நீ படித்த புத்தகம்
நீ உபயோகித்த கார்
நீ அணிந்த ஆடைகள்
நீ சுழலவிட்ட மின்விசிறி
நீ வைத்த ரோஜாச்செடி
நீ ரசித்த "நிலா" _ நான்
இன்னும் பல...இன்றும் இருக்கின்றன...
காலையில் கதவைத் தட்டும்
தென்றல் காற்று
இன்றும் அதன் பணி செய்கிறது
ஆனால் கதவைத் திறந்து
சுகம் அனுபவிக்க
அங்கு நீ தான் இல்லை..!
நாம் பேச நினைத்த வார்த்தைகள்
இன்னும் மிச்சமிருக்கின்றன
என் நெஞ்சுக் குழிக்குள்ளும்
உன் கல்லறைக் குழிக்குள்ளும்..!
நிரந்தரமான ஓய்வு
நிம்மதியானத் தூக்கம்
கவலையில்லாத வாழ்வு
கனவுகள் இல்லாத உலகம்
இப்படி எண்ணி
கல்லறைக்குள் போவதற்கா
கண்ணயர்ந்து விட்டாய்..?
காலையில்
கண் விழித்தெழும் போது
என் தலையணையில் கிடக்கிறது
உன்னோடு பரிமாற முடியாத
கனவுகள்..!
No comments:
Post a Comment